இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது.

முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.

பும்ரா தொடர்ச்சியாக பந்து வீசுவதை தடுக்கும் வகையில் ஜாக் கிராவ்லி செயல்பட்டதுபோன்ற சூழ்நிலை உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜாக் கிராவ்லியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்டார். கில் சில மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பென் டக்கெட் சமாதானப்படுத்த முயன்ற போது, இந்திய அணியினர் திரண்டதால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த தருணத்தை பார்த்து தான் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென முடிவெடுத்ததாக ஹாரி புரூக் தெரிவித்துள்ளார். ”பென் டக்கெட், ஜாக் கிராவ்லியிடம் இந்திய அணியினர் சென்றதை நாங்கள் பார்த்தோம். எனவே நாங்கள் சிறிய பேச்சுவார்த்தை நடத்தினோம். எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து அணியாக மீண்டும் அங்கு செல்லலாம் என்று நினைத்தோம். அதே சமயம் முடிந்தளவுக்கு நாங்கள் கிரிக்கெட்டின் நேர்மைத்தன்மைக்கு உட்பட்டு விளையாட முயற்சி செய்தோம். பும்ரா வீசிய அந்த ஒற்றை ஓவரில் இந்திய அணியினர் கிராவ்லி, டக்கெட் ஆகியோர் மீது மிகவும் கடுமையாக செயல்பட்டனர். அதைப் பார்த்த நாங்கள் இதுவே இந்தியாவுக்கு திருப்பி பதிலடி கொடுப்பதற்கான சரியான நேரம் என்று முடிவு செய்தோம்” என கூறினார்.

Share.
Leave A Reply

Exit mobile version