தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் சென்ற நிலையில், போராடி ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆட்டமும் சுவாரசியம் பெற்றுவருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற 13வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் சென்று ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்களுக்கு சென்றது இதுவே முதல் முறை. இரட்டை சூப்பர் ஓவர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் ஆப்கானிஸ்தான் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
முதல் சூப்பர் ஓவரின் முடிவில், இரு அணிகளும் தலா 17 ரன்கள் எடுத்து சமநிலையில் இருந்தன. இரண்டாவது சூப்பர் ஓவரில், ஆப்கானிஸ்தானுக்கு 24 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் 18 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசிவரை போராடியும் ஆப்கானிஸ்தான் தோல்வியை தழுவியது.
