இங்கிலாந்து-இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என இந்திய கேப்டன் சுப்மன் கில் உறுதியளித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் அடித்தன. பின்னர் 311 ரன்கள் பின்தங்கிய எஇலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 63 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது.
137 ரன்கள் பின்தங்கியதோடு 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 143 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 425 ரன்கள் அடித்து 114 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனால் ஆட்டம் டிராவில் முடித்து கொள்ளப்பட்டது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த இந்திய கேப்டன் சுப்மன் கில்,
”இத்தொடரில் அனைத்து போட்டிகளுமே கடைசி நாள் வரை சென்றுள்ளது. எனவே ஒவ்வொரு போட்டியும் நிறைய பாடங்களைக் கொடுத்துள்ளது. அடுத்தப் போட்டியை வென்று நாங்கள் தொடரை சமன் செய்வோம் என்று நம்புகிறோம். கடந்த காலங்களில் ரன்களை அடித்தது முக்கியமல்ல. நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போது நடுக்கங்கள் இருக்கும்.
அது நான் எந்தளவுக்கு நாட்டுக்காக விளையாட விரும்புகிறேன் என்பதைச் சொல்கிறது. முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோர் அடித்தோம். ஆனால் நன்றாக செட்டிலான எங்கள் பேட்ஸ்மேன்களில் யாராவது ஒருவர் பெரிய ஸ்கோர் அடித்தால் மட்டுமே வெற்றியை எதிரணியிடம் இருந்து பறிக்க முடியும்.
துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. ஆனால் அதை 2வது இன்னிங்ஸில் செய்ததில் மகிழ்ச்சி. பும்ரா அடுத்தப் போட்டியில் விளையாடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். போட்டியை வெல்லும் வரை எனக்கு டாஸ் முக்கியமல்ல” என்றுக் கூறினார்.