ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில், பரம எதிரியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை படுதோல்வி அடைந்தது.

இந்த சீசனில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 7-ல் தோல்வியைத் தழுவியுள்ளதால், மும்பை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு (Play-offs) கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வி மற்றும் ரன் ரேட் அடிப்படையிலேயே மும்பையின் விதி தீர்மானிக்கப்படும் என்ற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அணியின் ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என வருத்தத்துடன் தெரிவித்தார். “நேற்றைய ஆட்டத்தில் 10 ஓவர்கள் வரை நாங்கள் வலுவாகவே இருந்தோம், 180 முதல் 190 ரன்கள் வரை எடுப்போம் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால், மிடில் ஓவர்களில் எங்களால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. சென்னை அணி எங்களை விட மிகச் சிறப்பாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டனர். முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறியதும், பேட்டிங்கில் சொதப்பியதும் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது” என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.

மேலும் இந்த சீசன் குறித்துப் பேசிய அவர், “இந்த ஒரு இரவு மட்டுமல்ல, இந்த சீசன் முழுவதுமே நாங்கள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக அமைந்துவிட்டது” எனப் புலம்பினார். பந்துவீச்சில் இன்னும் அதிக ஆக்ரோஷமும், துல்லியமான திட்டமிடலும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், வெற்றிக்கான வாய்ப்புகள் இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

சிஎஸ்கேவிடம் தோல்வியடைந்தது பற்றி பேசிய அவர், சிஎஸ்கே வீரர்களை தோற்கடிக்க வேண்டுமானால் நெருப்பு பந்துகளை தான் வீசியிருக்க வேண்டும் என்றார். அந்த அளவுக்கு அவர்கள் மிக புத்திசாலித்தனமாக விளையாடி வென்றதாக குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version