வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையின் கீழ் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி திமுகவை ஆட்சியில் இருந்தும் இறக்கவேண்டும் என்ற முனைப்பில், பாஜக, அதிமுக தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி பேசியதாவது, எங்களுக்கு இது மகிழ்ச்சியான தருணம், கூட்டணி குறித்து முடிவு செய்துவிட்டோம், தொகுதிகளின் எண்ணிக்கையும் முடிவாகிவிட்டது என்று கூறினார்.
இந்தநிலையில், அதிமுக தலைமையில் பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, பாமக உடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
