வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற 593 தமிழக மீனவர்கள் அங்கேயே சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களைப் பாதுகாப்பாக மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், “தற்போதைய சூழலில் மீனவர்களை வெளியேற்றுவது சாத்தியமில்லை” என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
ஈரானில் சிக்கியுள்ள சகாய ஜெனிஷ் ராஜ் மற்றும் ஜூடலின் ஆகிய மீனவர்களை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி விசாரித்தார். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் பகிரப்பட்டுள்ளன. இருப்பினும், ஈரானிய அரசாங்கம் தற்போது வான்வழிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதாலும், போர்ச் சூழலாலும் உடனடி மீட்பு நடவடிக்கை சாத்தியமில்லை” என்று விளக்கமளித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் கூறுகையில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் உணவின்றியும், போதிய தொலைத்தொடர்பு வசதிகள் இன்றியும் தவித்து வருவதாகத் தெரிவித்தனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் தரப்பில், ஈரானில் மொத்தம் 593 தமிழக மீனவர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தினர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. மத்திய அரசின் விளக்கத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் விவரங்களைத் தூதரகத்துடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.
