தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த இழுபறி நீடித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தனது அடுத்தகட்ட நகர்வை அறிவித்துள்ளது. நேற்று சென்னையில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற CPM மாநிலக் குழுக் கூட்டத்தில், வரும் தேர்தலில் திமுக கூட்டணியிலேயே தொடர்வது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் அகில இந்தியத் தலைமை மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இந்த நீண்ட விவாதத்தில், தற்போதைய அரசியல் சூழலில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதே முதல் கடமை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கூட்டணியில் நீடிப்பது உறுதி செய்யப்பட்டாலும், தொகுதிகளின் எண்ணிக்கையில் எவ்வித சமரசமும் செய்து கொள்வதில்லை என்பதில் CPM நிர்வாகிகள் பிடிவாதமாக உள்ளனர். கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதை விடக் கூடுதலாக, இந்த முறை குறைந்தது 6 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதில் கட்சி உறுதியாக உள்ளது. பெரம்பூர் உள்ளிட்ட தங்கள் செல்வாக்கு மிகுந்த தொகுதிகளைப் பட்டியலிட்டுள்ள மாநிலக் குழு, இந்த எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்க வேண்டாம் எனத் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. குறிப்பாக, கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பத்தை மதித்து இந்த 6 தொகுதிகளைப் பெற வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், CPM தரப்பில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்ற சமிக்ஞை வெளிப்படையாகத் தெரிந்தாலும், திமுக தரப்பிலிருந்து இதுவரை முறையான அழைப்பு ஏதும் வரவில்லை என்பது அக்கட்சியினரிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற கூட்டணிக் கட்சிகளுடன் திமுக ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகக் கூறப்படும் சூழலில், இடதுசாரிகளை இன்னும் அழைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஓரிரு நாட்களில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவிலிருந்து அழைப்பு வரும் என CPM நம்புகிறது. ஒருவேளை திமுக எண்ணிக்கையைக் குறைக்க முயன்றால், அதைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ளவும் இடதுசாரிகள் தயாராகி வருகின்றனர்.
