கனமழை காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அணை நிலவரம்:
நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. நூறு அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 78 அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரித்த காரணத்தால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து, இன்று (மே 25) காலை 86 அடியை எட்டியது.
தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்து, இன்று நள்ளிரவு அணை அதன் முழு கொள்ளளவான 100 அடியை நெருங்கியது.
உபரி நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை:
அணையின் பாதுகாப்பைக் கருதி, நீர்மட்டத்தை 97.5 அடியாக நிலைநிறுத்திப் பராமரிக்கும் வகையில், அணைக்கான தற்போதைய நீர்வரத்தான வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி நீர் அப்படியே உபரி நீராக பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பவானியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளான மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.