நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த ராகவ் சத்தா, இன்று (ஏப்ரல் 24) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். ராகவ் சத்தாவுடன் சேர்த்து, ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால், சந்தீப் பதக் உட்பட மொத்தம் ஏழு ராஜ்யசபா எம்.பி.க்கள் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இது அக்கட்சிக்கு தேசிய அளவில் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. “நான் தவறான கட்சியில் இருந்த சரியான நபர்” என்று குறிப்பிட்ட ராகவ் சத்தா, ஆம் ஆத்மி தனது அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகி, சிலரின் சுயநலத்திற்காகச் செயல்படுவதால் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகவ் சத்தா கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. தற்போது ராஜ்யசபாவில் இருந்த 10 ஆம் ஆத்மி எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (7 பேர்) பிரிந்து வந்து பாஜகவுடன் இணைந்திருப்பதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயாது என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாட்டின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற விரும்புவதாகத் தெரிவித்த ராகவ் சத்தா, ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் தேச நலனுக்கு எதிராக இருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக தனது இரத்தமும் வியர்வையும் சிந்தி வளர்த்த ஆம் ஆத்மி கட்சி, தற்போது தனது கொள்கைகள் மற்றும் விழுமியங்களிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டதாக ராகவ் சத்தா வேதனை தெரிவித்தார். கட்சி தற்போது நாட்டின் நலனுக்காக செயல்படாமல், தனிநபர் ஆதாயத்திற்காக செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கிய சக்தியாக இருந்த ஆம் ஆத்மிக்கு, இந்த வெளியேற்றம் அரசியல் ரீதியாகப் பெரும் சரிவை ஏற்படுத்தும். அதே சமயம், ஆளும் கட்சியான பாஜகவுக்கு இது மிகப்பெரிய அரசியல் வெற்றியாகக் கருதப்படுகிறது. மாநிலங்களவையில் பாஜகவின் எண்ணிக்கை மற்றும் செல்வாக்கு அதிகரிப்பதன் மூலம், நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவது எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலகல் தனிப்பட்ட முறையில் சில எம்பிக்களின் வெளியேற்றம் மட்டுமல்ல. இது ஆம் ஆத்மி கட்சியின் உட்கட்சிச் சூழல் மற்றும் தலைமையின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சமீபகாலமாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில அரசியலில் நிலவிய சலசலப்புகள், இந்த உச்சக்கட்ட முடிவுக்கு வித்திட்டுள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், மாநிலங்களவை செயல்பாடுகளிலும் இந்த அரசியல் திருப்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version