சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிக்களுக்கான தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம், நலத்திட்டங்கள் ஆலோசனை, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், பொதுக்கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்த தேசிய கூட்டணி சார்பில் கடந்த 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதனை தொடர்ந்து கடந்த 30ம் தேதி தமிழக பாஜக சார்பில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
அதில் சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜகத் தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்தநிலையில் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக திடீரென அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு மத்திய பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உட்கட்ட்டைப்பு,பெண்கள் விடுதி, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேனா என தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். இதன் காரணமாக, தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன்.
கட்சியில் இருந்து ஒருவரை சஸ்பெண்ட் செய்ய முடியாமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இருக்கிறார். காங்கிரஸ் அடிமைக் கட்சியாக உள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி ஸ்டாலின் என்ன சொன்னாலும் தேசிய ஜனநாயக கூட்டணி கெட் இன் தான்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விரைவில் இந்த சூழ்நிலை விரைவில் மாறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர். விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை.
எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க யாரிடமும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா.
விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்று கொண்டால் பார்க்கலாம். தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார். இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை. அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பச்சை பொய் பேசுகிறார் என்று கூறினார்.
