61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பின்பு கடலுக்கு சென்று திரும்பிய விசைப்படகுகளில் மீன்களின் வரத்து அதிக அளவு காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி: 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று அதிகாலை 5 மணியளவில் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் நோக்கி புறப்பட்டன. தடைக்காலத்திற்குப் பிறகு முதல் நாள் மீன்பிடியில் மீனவர்கள் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்ட இந்தப் படகுகள் நேற்றிரவு 7 மணியளவில் கரை திரும்பின. கரைக்கு வந்த படகுகளில் மீன்களின் வரத்து கணிசமாக இருந்தது.
கடல் அமைதியாக இருந்ததால் நல்ல அளவில் மீன் பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். தடைக்காலத்தின்போது படகுகளைப் பராமரித்து, வலைகளைச் சரிசெய்து தயார்படுத்தியிருந்ததால் முதல் நாளிலேயே சீரான மீன் வரத்து கிடைத்தது. கேரள கடல் பகுதிகளில் ஜூன் 10-ம் தேதி முதல் மீன்பிடி தடை அமலில் உள்ள நிலையில், தூத்துக்குடி துறைமுகத்திற்கு கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீன் வியாபாரிகள் குவிந்தனர். இதனால் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இது மீனவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சந்தையில் பாறை மீன் ஒரு கூடை ரூ.7,000 வரை விற்பனையானது. முண்டக்கண்ணி, பாறை, அயிலை உள்ளிட்ட மீன்கள் ஒரு கூடை ரூ.5,000 வரையிலும், நெத்திலி ஒரு கூடை ரூ.3,800 வரையிலும் விலை போனது. சாலை மீன் ஒரு கூடை ரூ.1,800 முதல் ரூ.2,000 வரையிலும், விளை மீன் ஒரு கூடை ரூ.5,000 வரையிலும் விற்கப்பட்டன. சீலா மீன் கிலோவுக்கு ரூ.800 வரை விலை பெற்றது. மீன்களுக்கு எதிர்பார்த்ததை விட சிறப்பான விலை கிடைத்ததால் விசைப்படகு மீனவர்கள் உற்சாகமடைந்தனர்.
“தொடர்ந்து இதுபோன்று மீன்பிடித் தொழில் கிடைத்தால் எங்களுக்கு மிகவும் நல்லது. குடும்பத்தை நல்ல முறையில் பராமரிக்க முடியும்” என்று மீனவர்கள் தெரிவித்தனர். நேற்றைய தினம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக மீன் வியாபார சங்கத்தினர் தெரிவித்தனர்.
தடைக்காலத்திற்குப் பின் முதல் நாளே இவ்வளவு பெரிய வர்த்தகம் நடைபெற்றது மீன்வளத் துறைக்கும், மீனவர்களுக்கும் நல்ல சகுனமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் மீன் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை அரசு மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
