தமிழக சட்டப்பேரவையில் நாளை நடைபெறவுள்ள தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் தவெக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதே சமயம் அதிமுக மீண்டும் பிளவுப்பட்டுள்ளது. ஒருபுறம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், மறுபுறம் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்டோரும் என 2 குழுக்களாக பிரிந்து இருக்கிறது. அதாவது, தேர்தலில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம், மேலும், சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்.பி.வேலுமணியை நியமிக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பான கடிதத்தையும் சபாநாயகரிடம் வழங்கினர்.
இந்தநிலையில், இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக அதிமுக வாக்களிக்கும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது, நாளை நடைபெறும் வாக்கெடுப்பின் போது, அரசின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் சட்டமன்றக் குழுத் தலைவர் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், இதனை வலியுறுத்தி 47 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளதாகவும் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். சி.வி. சண்முகம் கட்சியைத் தன் பக்கம் ஈர்க்கவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் இல்லாத செய்திகளைப் பரப்பி வருவதாக இபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிகாரப்பூர்வ கொறடா யார் என்பதில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படாததால், உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க முடியும் என ஒரு தரப்பு கூறுகிறது. உறுப்பினர்கள் எந்தத் தரப்புக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களித்தாலும், தற்போதைய நிலையில் கட்சி தாவல் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என பேரவை விதிகள் சுட்டிக்காட்டுகின்றன.
இருப்பினும், சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர், இரு அணிகளாகப் பிரிவதற்கு முன்பு இபிஎஸ்-க்கு ஆதரவாக எடுத்த முடிவுகள் செல்லாது என விளக்கம் அளித்துள்ளனர்.
