மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் மரண விவகாரத்தில், ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர் என்று கூறிய நீதிபதி, புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2025ம் ஆண்டு ஜூன் மாதம் மடப்புரம் கோவில் காவலாளியாக இருந்த அஜித்குமார் என்ற இளைஞர் மீது கோவிலுக்கு வந்த நிகிதா என்ற பெண் அளித்த நகை திருட்டு புகாரில் கோவில் காவலாளி கைது செய்யப்பட்டார். பின்னர் உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக காவலாளி அஜித்குமார் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் ஜாமின் வழங்கக் கோரிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டது.
சிபிஐ தரப்பில், ” அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிபிஐ தரப்பில், “அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது.” என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, “ஒன்றுமே இல்லாத விசயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.
“முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, ” யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விசயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்கு பாடம் புகட்டுவோம் என குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
