கேரளாவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான சபரிமலை ஐயப்பன் கோவிலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத மாதாந்திர பூஜைகளுக்காக நேற்று மாலை திருநடை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதை அடுத்து, தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து ஐயப்பனைத் தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ், தனது மனைவி சௌமியா மற்றும் தங்களது பேரக்குழந்தைகளுடன் சபரிமலைக்கு வருகை தந்தார்.
இன்று அதிகாலையில் பம்பை நதிக்கரையில் இருந்து பாரம்பரிய முறைப்படி படியேறி, சந்நிதானம் நோக்கி மலையேறினார். பின்னர், சபரிமலை ஐயப்பன் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து, நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டார்.
