நாக்பூரிலிருந்து வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை அங்கீகரிக்கும் அறிவாலயம், பெரியார் மண்ணில் இருந்து வரும் தனக்கு அங்கீகாரம் அளிக்காதது வியப்பாக இருப்பதாக திமுகவை தனியரசு விமர்சித்துள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க-வை ஆதரித்து வந்தார். ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு தொகுதியை எதிர்பார்த்தார். ஆனால், அவரோடு இணைந்து செயல்பட்டுவந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கிய வேளையில், தனியரசு மட்டும் தனித்துவிடப்பட்டது அவருடைய ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து தனியரசு கூறியதாவது, “கடந்த ஐந்து ஆண்டுகளாக தி.மு.க அரசை, அணியை, முதல்வரை ஆதரித்திருக்கிறேன். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். முதல்வராக ஸ்டாலின் தொடர வேண்டும் என விரும்புகிறேன். இந்த அரசு, கொள்கை, முதல்வர் மீது இனம் புரியாத பற்றும் பாசமும் இருக்கின்றன. அதனால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையிலும், பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை வைக்கவில்லை.
ஜெயலலிதா இரண்டு முறை எனக்கு வாய்ப்பு தந்து வெற்றிபெறச் செய்தார். ஆனால், ஸ்டாலின் அப்படியில்லை என்பதை அவரே நிரூபிக்கிறார். மேலும் பேசிய அவர், யாரையும் நம்பி பயணிக்கும் அளவுக்கு அரசியல் களம் நேர்மையாக இல்லை. இனி யாரும் என்னை மௌனிக்க முடியாத அளவுக்கு சுயமாகவும், என்னை நம்பி வருபவர்களை இணைத்துக்கொண்டு தீவிரமாக செயல்படுவேன் எனவும் தெரிவித்தார்.
