தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை விறுவிறுப்பாக இறுதி செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பிறகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
கடந்த 2021 தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட விசிக, 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. தற்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இம்முறை இரட்டை இலக்கத் தொகுதிகளை (10-க்கும் மேற்பட்ட இடங்கள்) எதிர்பார்த்தது. இருப்பினும், கூட்டணியில் தேமுதிக போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் நிலவும் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, திமுக தலைமை 8 இடங்களை இறுதி செய்துள்ளது. கடந்த முறையை விட கூடுதலாக 2 இடங்கள் கிடைத்துள்ளது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த 8 தொகுதிகளிலும் விசிக தனது தனிச் சின்னமான ‘பானை’ சின்னத்திலேயே போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திமுக தனது மற்றொரு முக்கியக் கூட்டணியான காங்கிரசுக்கு 28 இடங்களை ஒதுக்கியுள்ள நிலையில், தற்போது விசிக-வுடனான தொகுதிப் பங்கீடும் சுமுகமாக முடிந்துள்ளது. இதன் மூலம், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிகளுக்கு எதிராக, திமுக தனது வலுவான கூட்டணியை நிலைநிறுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விசிக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல்:
திருப்போரூர்
செய்யூர்
நாகை
புவனகிரி
அரூர்
காட்டுமன்னார்கோயில்
கள்ளக்குறிச்சி
குன்னம்
மயிலம்
பெரியகுளம்
சிவகங்கை
(வானூர் அல்லது
திண்டிவணம் )
கே.வி.குப்பம்
ஸ்ரீபெரும்புதூர்
சென்னை மாவட்டம்( ஒரு தொகுதி )
10 தனி தொகுதிகளில் ஐந்து பொது தொகுதி என மொத்தம் 15 தொகுதிகளின் விருப்ப பட்டியலை திமுக விடம் விசிக வழங்கியுள்ளது.
