தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘Y’ பிரிவு பாதுகாப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமித்ஷாவுக்கு நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், நேற்று பெரம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் மீது பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்றும், திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்றும் தவெக மாநிலச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார்.
சென்னை பெரம்பூரிலிருந்து கொளத்தூர் நோக்கி விஜய் சென்றபோது, அவருக்கு வழங்கப்பட்ட விஐபி பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, தவெக-வின் சட்டப் பிரிவு நிர்வாகி நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மத்திய அரசால் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டும், தமிழகத்தில் விஜய்யின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பாதுகாப்பு ஓட்டைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சார களத்தில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, விஜய்க்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விஜய் செல்வதற்கு விஐபி கான்வாய் ஏற்பாடு செய்யவில்லை. ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜய்க்கு போலீசார் ஏன் கான்வாய் ஏற்பாடு செய்யவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ள நிர்மல்குமார், ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடத்தில் உயர் அதிகாரிகள் இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ளவரிடம் இருந்து 10 மீட்டர் தொலைவில் தான் தொண்டர்களை நிறுத்த வேண்டும். ஆனால் 10 மீட்டர் தொலைவிற்கு மாறாக விஜய் வாகனம் அருகே தொண்டர்களை போலீசார் அனுமதித்துள்ளனர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும் பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரச்சாரத்திற்கு உரிய ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை. விஜய் பிரச்சாரம் செய்ய முடியாத வகையில் சென்னை போலீசார் நடந்து கொள்கின்றனர் என்றும் விஐபியான விஜய் பிரச்சார இடத்திற்கு தடையின்றி வரவும் செல்லவும் உரிய வழியை போலீசார் ஏற்படுத்தவில்லை. விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள செல்லும் இடத்தில் பெரிய பேருந்துகள் வந்து இடையூறு செய்கின்றன என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக, பாதுகாப்பு வட்டாரம் (sterile zone) உருவாக்கப்படாததால், பிரசார வாகனம் பொதுமக்களால் முற்றிலும் சூழப்பட்டு, பெரும் நெரிசல் ஏற்பட்டது.
மேலும், பிரசாரத்திற்காக அமைக்கப்பட்ட ஒலி அமைப்புகள் அகற்றப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், கூட்டமாக வந்த பொதுமக்கள் உரையை கேட்க முடியாமல் முன் நோக்கி நெருங்கினர். இதனால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரித்து விபத்து அபாயம் ஏற்பட்டது.
இந்த அனைத்து பாதுகாப்பு குறைபாடுகளும் பொதுமக்களுக்கும் பாதுகாக்கப்படும் நபரான விஜய்க்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சென்னை போலீசார் மேற்கொண்ட பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த கடுமையான தவறுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
