கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. குறிப்பாக, குன்னுகரா மற்றும் செங்கமனத் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் 9 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 19 பேருக்கு அதற்கான அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கேரள சுகாதாரத் துறை அம்மாநிலம் முழுவதும் பொது சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவலைத் தடுக்கத் தீவிரமான களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் நோய், கடுமையான காய்ச்சல் மற்றும் மூட்டுகளில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தக்கூடியது. இதனுடன் தலைவலி, தசைவலி மற்றும் அதீத உடல் சோர்வு போன்ற அறிகுறிகளும் தென்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் மக்கள் சுயமாக மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்றும், உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி முறையான சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, கோடை மழையினால் தண்ணீர் தேங்கும் இடங்களான டயர்கள், பூந்தொட்டிகள் மற்றும் கட்டுமானப் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்கத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதையொட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளில் சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கன்னியாகுமரி, தேனி மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்குள் நோய் பரவாமல் தடுக்கும் வகையில், சுகாதாரக் குழுவினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பொது இடங்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழக எல்லைப்பகுதி மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version