சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து உலர் சாம்பல் விற்பனை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், உரிய ஆவணங்களுடன் நாளை ஆஜராகும்படி, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்துக்கு சொந்தமான திருவள்ளூர், துாத்துக்குடி, சேலம் உள்பட ஐந்து அனல் மின் நிலையங்களில் வெளியாகும் உலர் சாம்பலில், 20 சதவீதம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மீதம் மற்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது.
சேலம் அனல் மின் நிலையத்தில் கிடைக்கும் உலர் சாம்பல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படாமல், மாவட்டத்தில் உள்ள முத்துகுமார் டிரேடர்ஸ் என்ற நிறுவனத்துக்கு, சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது எனவும், இந்த உலர் சாம்பல், அந்த நிறுவனம் வெளிசந்தையில் அதிக விலைக்கு விற்பதாகவும், இந்த முறைகேடு குறித்து, கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு அளித்த மீது, நடவடிக்கை எடுக்க, மின்வாரிய இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும் என, சேலம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரர் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? என்பது குறித்து, உரிய ஆவணங்களுடன் பதிலளிக்க, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டதா?, உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களை, இந்த நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டும், அது தாக்கல் செய்யப்படவில்லை எனவும், இது மனுதாரர் குறிப்பிட்ட நிறுவனத்துடன், மின்வாரிய அதிகாரிகள் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரிவித்தது.
நீதிமன்றம் உத்தரவிட்டும், அதுதொடர்பான ஆவணங்களை வேண்டுமென்றே தாக்கல் செய்யாமல் மறைக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், உலர் சாம்பல் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களுடன் வரும் 26ம் தேதி நேரில் ஆஜராகும்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உத்தரவிட்டனர்.
இல்லாவிட்டால், இப்புகார் குறித்து விசாரணையை சி.பி.ஐ., போன்ற சுதந்திரமான புலனாய்வு அமைப்புக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.