தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் முன்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், அறிவிக்கப்பட்ட 164 தொகுதிகளின் வேட்பாளர்களும் அண்ணா அறிவாலயத்தில் வரிசையாகச் சந்தித்து வருகின்றனர். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் புதிதாகக் களம் காணும் 60-க்கும் மேற்பட்ட இளைய வேட்பாளர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
திமுகவின் கூட்டணி கட்சிகளான, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்களும் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்.
வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னோட்டமாக நடைபெறும் இந்தச் சந்திப்பு, கட்சித் தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற கையோடு, வேட்பாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து, 2026-ல் மீண்டும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
