தமிழக அரசு கொண்டு வந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று விமர்சித்து பேசியது நினைவிருக்கலாம். அதனால் அவர் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். இப்போது அதேபாணியில் திமுக எம்எல்ஏ ஒருவர் ஓசி பஸ் என்று பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார். மண்டபத்தை திறந்து வைத்து கூடியிருந்த கிராமமக்கள் மத்தியில் எம்எல்ஏ மகாராஜன் பேசினார்.
அவர் பேசும்போது, நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது. இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்றார்.
மேலும் மகளிர் விடியல் பயணதிட்டத்தில், நான் முன்னரே கூறியது போல் பெண்கள் அனைவரும் அரசு பஸ்ஸில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம். அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள். உங்கள் ஊருக்கு பஸ் விட்ட பின், எங்கள் ஊருக்கு ஏரோபிளேன் வேணும் என்றும் ரயில் வேணும் என்றும் கேட்டு விடாதீர்கள் என்றார்.
பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று… pic.twitter.com/2Yeyb674TM
— K.Annamalai (@annamalai_k) June 11, 2025
ஏற்கனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி விடியல் பணத்தை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ்ஸில் செல்லுங்கள், உங்கள் ஊருக்கு ஓசி பஸ் விட போகிறோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.