தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை முன்னிலைப்படுத்தி சில சூதாட்ட கும்பல்கள் வதந்திகளை பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

தேர்தலுக்கு முன்பு திமுகவை வைத்து சூதாடியவர்கள், தற்போது ஓட்டுப்பதிவுக்கு பின்பு விஜய்யை வைத்து தங்கள் காய்களை நகர்த்தி வருவதாகவும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்கள் ஏமாற்றமடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

களத்தில் நேரடியாக மக்களை சந்தித்ததன் அடிப்படையில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவை வழங்கியுள்ளதாக திருமாவளவன் கூறினார். திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி தொடரும் என தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

ஒரு சில தொகுதிகளில் உட்கட்சி பூசல் காரணமாகக் கட்சியினர் சரியாக வேலை செய்யவில்லை என்று தான் சொன்னது, அவர்களை நெறிப்படுத்துவதற்காகவே தவிர வேறில்லை என அவர் விளக்கமளித்தார். திமுக கூட்டணிக்காக விசிக தோழர்கள் ஆற்றிய பங்கு போற்றுதலுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், அக்கூட்டணியைச் சிதறடிக்கவும் பலர் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், அத்தகைய சதி செயல்களை விசிக முறியடித்துள்ளதாகவும் திருமாவளவன் உறுதியாக தெரிவித்தார். விசிகவை இலக்கு வைத்து திட்டமிடுபவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version