சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்து வருவது நகைப்பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் மத்திய கிழக்கில் நீடித்தபோதிலும், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தை விடுத்து மற்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த மார்ச் மாத தொடக்கத்தில் 22 கேரட் ஒரு சவரன் தங்கம் சுமார் ரூ.1.36 லட்சத்திலிருந்து ரூ.1.40 லட்சம் வரை விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை கணிசமாகச் சரிந்து வருகிறது.
தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சிக்கு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் எடுத்துள்ள நிதிநிலை முடிவுகளே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் உள்ளிட்ட முக்கிய மத்திய வங்கிகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன அல்லது நிலையாக வைத்துள்ளன. வட்டி விகிதங்கள் உயரும்போது, வட்டி வருமானம் தராத தங்கத்தின் மீதான ஈர்ப்பு முதலீட்டாளர்களிடையே குறைகிறது. இது சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவையைச் சரித்து, விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய சந்தை நிலவரம் குறித்து TD Securities நிறுவனத்தின் கமாடிட்டி நிபுணர் டேனியல் காலி (Daniel Ghali) கூறுகையில், தங்கம் விலை குறுகிய காலத்தில் மேலும் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் $4,500 – $4,400 என்ற ஆதரவு நிலையை (Support level) நோக்கிச் செல்லக்கூடும் என்றும், இந்தச் சரிவுக்குப் பின் மீண்டும் ஒரு விலை ஏற்றம் ஏற்படலாம் என்றும் அந்நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவில் திருமண சீசன் நெருங்குவதால், இந்த விலை குறைவு நகைக் கடைகளில் கூட்டத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
