சென்னையில் கடந்த மூன்று நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடி சரிவைக் கண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் காரணமாக, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.13,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலையில் ரூ.1,120 குறைந்து, ரூ.1,10,480-க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வெள்ளி விலை இன்றும் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகவே நீடிக்கிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக மாற்றமில்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழலால் தங்கம் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் நிலையில், இன்றைய இந்த விலை வீழ்ச்சி இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version