தென்மேற்கு பருவமழை கேரளாவில் அடுத்த 2 முதல் 3 நாட்களில் தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஜூன் 3 முதல் 7-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும், சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்பதால் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
