சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வாயில்களும் இன்றிரவு (நவ. 22) முதல் நாளை (நவ. 23) இரவு வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால், இப்பகுதிகளில் வசித்த மக்கள் உயர் நீதிமன்றத்தை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் அது அதிக தூரமாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
இதனை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை மக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவித்தது.
இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி இன்று (நவ. 22) சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை (நவ. 23) ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் B.ஹரி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
