அணைகளை தூர்வாரி பராமரிக்கவும், அதற்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை உள்ளிட்ட 11 அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் கொள்ளும் பரப்பை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அணைகளில் மணல், சகதி, களிமண் தேங்கியுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது.
ஆற்றுப்படுகை அருகே வசிப்போரும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளனர். அணைகளைத் தூர்வாரவும், பராமரிக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலருக்கு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள 11 அணைகளையும் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம், சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “அணைகளை தூர்வாருவது அவசியம். அப்போதுதான் மழை நீரை சேமிக்க இயலும். ஆகவே அணைகளை தூர்வாரி பராமரிக்கவும், அதற்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.