வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நாளை (மே 16) 6 இடங்களில் நடைபெற உள்ளது.
கனமழை காலங்களில் செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து மிகஅதிக வெள்ளநீர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த நேரங்களில் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி நாளை (மே 16) மாநகராட்சிக்குட்பட்ட 6 இடங்களில் மாலை நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
1. மாத்தூர் பாலசுப்பரமணி நகர் 2. சடையான் குப்பம் 3. கானு நகர் 4. காசி திரையரங்கம் அருகில் உள்ள பாலம் 5. போரூர் 6. கோட்டூர்புரம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த ஒத்திகை நிகழ்வில் வருவாய், நீர்வளம், காவல் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துத் துறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வானது ஒரு ஒத்திகை மட்டுமே என்றும் இதுதொடர்பாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மட்டும் வழுக்கி விழும் சிறப்பு கழிவறைகள்.. தமிழக காவல்துறையை நோக்கி நீதிமன்றம் கேள்வி..
செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து மிகஅதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.