தமிழகத்தில் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தவெக, நாதக என 4 முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சமீபத்தில் அன்புமணியின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக இணைந்த நிலையில் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறிவந்த டிடிவி தினகரன், இபிஎஸ்ஸுடன் உள்ள கருத்து மோதலை பொருட்படுத்தாது என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளார். இதையடுத்து ஓபிஎஸ் எந்த கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தநிலையில், நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்பு கூட்டணி முடிவை தெரிவிப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது வீட்டில் இருந்து போடி புறப்படுவதற்காக சென்றார். அப்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்பட்டதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலத்தில் ஓபிஎஸ், நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து பிறகு தனது முடிவை தெரிவிப்பதாக கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
