கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
தோனியின் வழக்கை நிராகரிக்கக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி அமர்வில் கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி, “சாட்சிகள் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த மனுவை ஏற்றுக்கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும்” என கூறி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில், இதுதொடர்பான விசாரணையின்போது, தோனி ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், விவாத நிகழ்ச்சியில்தான் தோனிக்கு எதிராக பேசியிருந்தார். எனவே விவாத நிகழ்ச்சியின் சிடி-யை எழுத்து வடிவமாக மாற்றுவதற்கு கட்டணமாக ரூ.10 லட்சம் செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
