2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடிபிடித்துள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், ஏற்கனவே, அதிமுக-பாஜக கூட்டணியில் அன்புமணி தரப்பு இணைந்துவிட்டது. மேலும் பல கட்சிகளை இணைத்து பிரதமர் மோடி தமிழகம் வருகையின்போது கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்வது குறித்து இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது
இந்த ஆலோசனையை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேசிய ஜன நாயக கூட்டணியில் தேமுதிகவை இணைக்கவேண்டும் என்பதில், தொடர் பேச்சுவார்த்தையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இருப்பினும், பல்வேறு நிபந்தனைகளை தேமுதிக வைப்பதாக தகவல் வருகிறது.
அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிளை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், இதை உறுதி செய்யவே இன்று பியூஸ்கோயல் சென்னை முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தேமுதிக தலைமை, பேச்சு வார்த்தை தொடர்பான எந்த தகவலையும் தெரிவிக்காமல் இரகசியம் காத்து வருகிறது.
