மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடைசியாக போட்டியிட்ட, அதிமுக இதுவரை வெற்றி கண்டிராத திருவாரூர் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அரசியல், சமயம் ஆகியவைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். மாவட்ட தலைநகராகவும் திருவாரூர் விளங்குகிறது. கடந்த 1997-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியில் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான் வட்டத்தையும் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 2,374 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன் அமைக்கப்பட்டது திருவாரூர் மாவட்டம்.
கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது. சைவ மதத்தில் பெரிய கோயில் என்றழைக்கப்படுகின்ற தியாகராஜர் கோயில் இந்த தொகுதியில்தான் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக திருவாரூர் ஆழித்தேர் விளங்குகிறது. நீதி கேட்டு வந்த பசுவுக்காக தனது மகனைத் தேர்க்காலில் வைத்து கொன்ற மனுநீதிச் சோழன் அரசாண்ட ஊர் இது என ஆன்மீகவாதிகள் தெரிவிக்கின்றனர்.
இதுபோல் தமிழக அரசியல் வரலாற்றில் கோலோச்சிய மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் சொந்த ஊராக திருவாரூர் விளங்கி வருகிறது. அவர் திருக்குவளையில் பிறந்தாலும், தான் வளர்ந்தது, படித்தது, அரசியல் அனுபவங்களை கற்றுத் தேர்ந்தது எல்லாம் இந்த திருவாரூரில்தான் என பலமுறை கூறியிருக்கிறார்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. நெல் சாகுபடிக்கு ஏற்ற சமவெளிப் பகுதிகள் கொண்ட தொகுதியாக இருப்பதால் நெல் சாகுபடி அதிகமாக நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் பிரதான தொழிலாக நெல் உற்பத்தி இருப்பதால் பல இடங்களில் இதனை சார்ந்த நவீன அரிசி ஆலைகள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருவாரூர் தொகுதியில் திருவாரூர் தாலுகாவின் அனைத்து பகுதிகள், குடவாசல் தாலுகா மற்றும் நீடாமங்கலம் தாலுகாவில் சில பகுதிகள் உள்ளன. இத்தொகுதியை பொறுத்தவரை ஆதிதிராவிடர்கள் நிறைந்து வாழ்கின்ற பகுதியாக உள்ளது. இவர்களுக்கு இணையாக வெள்ளாளர் சமூகத்தினர் உள்ளனர். இதற்கு அடுத்து கள்ளர் உள்ளிட்ட முக்குலத்து சமுதாயத்தினரும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய சமூகத்தினரும் கணிசமாக உள்ளனர்.
ஆரம்பத்தில் தனி தொகுதியாக இருந்த திருவாரூர் தொகுதி 2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இருந்து பொது தொகுதியாக மாறியது. முதன் முதலில் 1962-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அம்பிகாபதி வெற்றி வெற்றி பெற்றார். இதுவரை 14 சட்டமன்ற தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது.
இதில் தி.மு.க. 8 முறை வெற்றிவாகை சூடியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது. ஆனால் இதுவரை அ.தி.மு.க. இந்த தொகுதியில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கே.கலைவாணன், அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வத்தை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
இந்தநிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உதயநிதி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு சென்னை தொகுதிகளில் திமுகவுக்கு பின்னடைவு என கணிப்புகள் வருவதே காரணம் என்கின்றனர். திமுகவின் கோட்டையான திருவாரூரில் தான் 2011, 2016 தேர்தலில் கருணாநிதி வென்றிருந்தார். எனவே அங்கு சிட்டிங் எம்.எல்.ஏ. ஆன பூண்டி கலைவாணன் தான் இம்முறையும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், களம் இப்படி மாறியிருப்பதாக பேசப்படுகிறது.
