தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்திய அளவில் உயர்ந்த விருது என அறியப்படுவது ஞான பீடம். இது அரசு சாரா அமைப்பால், ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 8ம் தேதி, எழுத்தாளர்கள் கலைஞர்கள் அமைப்புகளை சார்ந்தவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். அதில், அரசு சாரா நிறுவனத்தால் வழங்கப்படும் விருதை விட உயரிய கௌரவத்தை இந்திய அளவில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசால், வழங்க முடியும். தமிழ் பீடம் விருது என்ற பெயரில் அல்லது முதலமைச்சர் விரும்பும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டும் என்றும் இந்த விருது வழங்குவது வரலாற்றின் தேவையாக, காலத்தின் தேவையாக உள்ளது என்பதால் இந்த தேவையை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையில், இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  எழுத்தாளர்கள் கலைஞர்கள் அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த நூல்களுக்கு விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.

முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். இதற்காக தனி விருது தேர்வுக் குழு அமைக்கப்படும் எனவும் ஒவ்வொரு மொழிக்கும் தலா ரூ.5 லட்சம் பரிசுடன் செம்மொழி இலக்கிய விருதுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version