தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலில், திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற இன்று (மார்ச் 9) மாலை 3 மணி வரை அவகாசம் இருந்த நிலையில், இதுவரை 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 6 பேர் வேட்பு மனு ஏற்கப்பட்டது. எனவே, இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார்.
திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திருச்சி சிவா (5-வது முறையாக) மற்றும் செய்தித் தொடர்பாளர் ஜெ. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் எம். கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். தேமுதிக சார்பில் முதன்முறையாக மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் செல்வது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை, அக்கட்சியின் மூத்த தலைவர் எம். தம்பிதுரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கே அவர்கள் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டதால், தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர்கள் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வச் சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.”
