தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து சங்கீதா கூறியுள்ள தகவல்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
விஜய்க்கும் சங்கீதாவிற்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இது நாம் அறிந்ததே. அப்படியிருக்கையில் கடந்த சில வருடங்களாகவே விஜய்யும் சங்கீதாவும் ஒன்றாக இல்லை. அவர்களுக்கு நடுவே பிரச்சனை உள்ளது என பொதுவெளியில் பேசப்பட்டு வந்தது. ஆனால், இது தொடர்பாக இருவரும் பொதுவெளியில் ஏதும் பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் திருமணமாகி 27 வருடங்களுக்கு பிறகு விஜய்யின் மனைவி சங்கீதா தற்போது விவாகரத்து கோரியுள்ளார்.

விவாகரத்து கோரியது தொடர்பான காரணங்களாக சங்கீதா தனது மனுவில், “நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தது எனக்கு 2021 ஏப்ரல் மாதம் தெரிய வந்தது. அதை நான் கண்டுபிடித்த பிறகும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் தொடர்ந்து வந்தார். அவ்வாறு அவர் உறவை தொடர்ந்து வந்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். நடிகையுடனான திருமணத்தை மீறிய உறவை கண்டுபிடித்த பிறகு விஜய்யால் நான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன். பலமுறை வலியுறுத்தியும் இரக்கமே இல்லாமல் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தார் விஜய். 2021ம் ஆண்டு முதல் மனதளவிலும் உணர்வுபூர்வமாகவும் விஜய் என்னை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் தன்னுடைய திருமண, சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் இருந்து முழுவதுமாக விலக்கி வைத்துவிட்டார். 2021ம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனியாக வசித்து வருகிறோம்.
எனது கணவர் விஜய் தொடர்ந்து நடிகையுடன் வெளிநாடு செல்கிறார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். என் கணவருடன் வெளிநாடு செல்லும் நடிகை இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். என் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை நடிகை வெளியிட்டு வருவது எனக்கு அவமானத்தை தருகிறது. எனது கணவரின் திருமணத்தை மீறிய உறவால் என் குழந்தைகளும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். அனைத்து தரப்பினரின் மதிப்பை காக்கும் வகையில் தற்போதைக்கு நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

விசாரணையின் போது நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன். தேவைப்படும் பட்சத்தில் எனது கணவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் நடிகையை வழக்கின் 2-வது எதிர்மனுதாரராக சேர்ப்பேன். திருமணத்தை மீறிய உறவை தட்டிக்கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். மேலும் என்னை சுதந்திரமாக நடமாட விடாமல் தடுத்தார். அதோடு பொருளாதார ரீதியாக விஜய் எனக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்” என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு ஏற்கனவே கரூர் விவகாரம், CBI விசாரணை, ஜனநாயகன் விவகாரம் என பல்வேறு நெருக்கடிகள் இருப்பதும், அவை அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தி வருவதும் தொடரும் சூழலில், தற்போது விஜய்யின் மனைவியே அவர் மீது வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் விஜய்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விஜய் தரப்பு பதில் என்ன? என்பது தற்போது எதிர்பார்ப்பை கிளப்பும் முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
