துக்க நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட மோதலில், சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொன்னேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க வந்த அவரது அண்ணனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (என்கிற சின்ன கோனை, 27). இவர் மீது மணலி புதுநகர் காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், ‘சி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார். இதனால், இவரும் இவரது அண்ணன் நவீனும் சொந்த ஊரில் வசிக்காமல் வெளியூரில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாப்பாளையத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அண்ணன், தம்பி இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். இறுதி ஊர்வலத்தின் போது இவர்களுக்கும், மற்றொரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு முடிந்த பிறகு, தனித்தனி குழுக்களாக மது அருந்திக் கொண்டிருந்தபோது மீண்டும் இருதரப்புக்கும் இடையே தகராறு வெடித்தது. அது முற்றிய நிலையில், எதிர்த்தரப்பினர் ஆயுதங்களுடன் அண்ணன், தம்பி இருவரையும் தாக்கத் தொடங்கினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க இருவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும், மர்ம கும்பல் பிரசாந்தை ஓட ஓட விரட்டிச் சென்று கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்தது. தம்பியை காப்பாற்ற முயன்ற அண்ணன் நவீனுக்கும் வெட்டுக் காயம் விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்தார். தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து தலைமறைவானது. குடியிருப்புப் பகுதிக்கு அருகே நடந்த இந்தச் சம்பவத்தால் உள்ளூர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மணலி புதுநகர் காவல்துறையினர், படுகாயமடைந்த நவீனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த பிரசாந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மகனின் கொலை வழக்கில் பிரசாந்துக்குத் தொடர்பு இருப்பதால், அதற்குப் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version