சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.
சாத்தான் குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் கடந்த 23 ஆம் தேதி மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் காவல்துறையினர் தாக்கியதே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பிற்கு காரணம் என்பதை உறுதி செய்த நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளிகளின் தண்டனை விவரங்கள் மார்ச் 30 ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் தண்டனை விவரங்கள் குறித்து அறிவிப்பதற்காக இன்று, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன் விசாரணை தொடங்கியது. அப்போது குற்றவாளிகளின் உடல் மற்றும் மனநிலை அறிக்கை, நன்னடத்தை சான்றிதழ் ஆகியவை சமர்க்கப்பட்டது. அறிக்கைகளை வாசித்த நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்கள் மதியம் 2 ;30 மணிக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
