சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை வருகிற 26-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாங்கம், காவல்துறை, அரசியல்வாதிகள் ஆகியோர் மீது தனது யூடியூப் சேனலில் கடுமையான விமர்சனங்களை வைத்து வருபவர் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இதுபோன்ற ஒரு வழக்கில் ஏற்கனவே அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதனிடையே, சினிமா தயாரிப்பாளர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் பணம் பறித்ததாக சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், இந்த புகார் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது.
தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அப்போது , திமுக அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார். இதற்கிடையில், போலீஸ் தன்னை கைது செய்ய வருவதை அறிந்த சவுக்கு சங்கர், வீட்டில் இருந்தபோது வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சவுக்கு சங்கரை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அதன் பிறகு, சவுக்கு சங்கரை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, வருகிற 26 ஆம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அனிதா ஆனந்த் உத்தரவிட்டார். இதன்பேரில், போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
