மலாக்கா ஜலசந்தி பகுதியில் நிலவிய சென்யார் புயல், இந்தோனேசியாவில் கரையை கடந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை – இந்திய பெருங்ககடலில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வடதமிழகம் – புதுச்சேரி கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
அதேபோல, மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, மேற்கு திசையில் நகர்ந்து, இன்று “சென்யார்” புயலாக மேலும் வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, இன்று காலை 7.30 – 8.30 மணியளவில் இந்தோனேசியாவில் கரையை கடந்தது.
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர பகுதிகளில் பலத்த தரை காற்று மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவ.28: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும்; ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நவ.29: திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.
அதேபோல திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிககனமழைக்கும்; புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
நவ.30: திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
நவ.26 – 27: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.28 – 29: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்
நவ.26 – 27: தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50-60 கி.மீ வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ வேகத்திலும் வீசும். அதேபோல, வடக்கு அந்தமான் மற்றும் ஏனைய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
நவ.28: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும், தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
