அமைச்சர் ராஜ கண்ணப்பனை ராஜினாமா செய்யக்கோரி தலைமை கூறுவதாக சமூக வலைதளங்களில் கருத்து பரவி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஆட்சியில் பங்கு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக திமுக-காங்கிரஸ் கூட்டணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு டெல்லி காங்கிரஸ் தலைமை ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டாலும், கட்சி நிர்வாகிகள் இசைவு கொடுக்காமல் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சமீபத்தில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், 170 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு 160 தொகுதிகள் வரை வெற்றிப்பெறும் என்று பேசியிருந்தார். அதில், 2021ல் 173 தொகுதியில் போட்டியிட்ட திமுக 133 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது என்றும், காங்கிரஸ் கேட்பது திமுக தோல்வியடைந்த இடங்களைத்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்திருந்தார்.
பொதுவெளியில் அமைச்சர் கூறிய கருத்துக்களால் இந்த கூட்டணியில் மீண்டும் சலசலப்பு நிலவிவருகிறது. இந்தநிலையில் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கும் கட்சி கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நெல்லை சென்றார் ராஜகண்ணப்பன். நேற்று மதியம் வரை நெல்லையில் இருந்த ராஜகண்ணப்பனுக்கு, திமுக தலைமை உடனடியாக சென்னை வருமாறு உத்தரவுப்போட்டதால் உடனடியாக சென்னைக்கு புறப்பட்டிருந்தார்.
இதையடுத்து, அமைச்சரின் பேச்சால் கூட்டணில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியில் இருக்கும் திமுக தலைமை, ராஜகண்ணப்பனை ராஜினாமா செய்ய கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. மேலும் இது குறித்து விசாரிக்கையில், அப்படி ஏதுவும் அறிவுறுத்தப்படவில்லை என அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
