தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்க அரசு தரப்பில் ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.126 கோடி ரொக்கம், ரூ.295 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் அடங்கும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.265 கோடி மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 1.40 லட்சம் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர, 299 துணை ராணுவ கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் இணையவுள்ளன; இதில் 115 கம்பெனிகள் ஏற்கனவே தமிழகம் வந்துவிட்டன.
தபால் வாக்கைப் பொறுத்தவரை, 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 1.90 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதுவரை 15,000 பேர் தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
தேர்தல் பணியில் உள்ள 1.5 லட்சம் அலுவலர்கள் படிவம் 12D மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,938 இடங்கள் பதற்றமானவை எனத் தரம் பிரிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற ஏதுவாக, வரும் ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயரையும் பூத் விவரங்களையும் அறிய 1950 என்ற எண்ணிற்கு ‘EPIC’ எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
