அதிமுக – பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சமீபத்திய பேட்டி தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்தினார். அதேசமயம், “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமைய வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டது கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரமா என விமர்சகர்கள் கேட்கின்றனர்.
மேலும், “தமிழக மக்கள் திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். மாநிலம் ஒரு பெரிய மாற்றத்திற்குத் தயாராக உள்ளது. தமிழகத்தில் என்.டி.ஏ ஆட்சி அமைய வேண்டும், எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்” என்று தெரிவித்தார். வழக்கமாக ‘அதிமுக ஆட்சி’ என்று குறிப்பிடாமல், ‘என்.டி.ஏ ஆட்சி’ (கூட்டணி ஆட்சி) என அவர் அழுத்திச் சொன்னது, ஒருவேளை வெற்றி பெற்றால் தமிழகத்தில் பாஜகவும் அமைச்சரவையில் இடம் பெறும் ‘கூட்டணி ஆட்சி’ முறையைத்தான் அவர் சூசகமாக உணர்த்துகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், இன்று மாலையே அதற்கான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும், கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் சுதந்திரமாகத் தங்களுக்குத் தேவையான இடங்கள் குறித்து ஆலோசிக்கும் என்றும் கூறினார்.
தொகுதிப்பங்கீடுக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை. கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதிப் பங்கீட்டு
விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக ஒன்றாக உள்ளோம். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதும் பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
திமுக அரசின், முடிவு தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் காங்கிரஸை மக்கள் புறக்கணிக்கின்றனர். ஈபிஎஸ் உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். திமுகவை எதிர்க்க தயாராக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் எபதமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர் என்றார்.
