தமிழக வெற்றிக்கழகத்திற்கான வேட்பாளர் தேர்வில் முக்கிய டிவிஸ்ட் வைக்கும் விஜய். அது என்ன தெரியுமா? பார்க்கலாம்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இத்தகைய சூழலில் அனைத்து கட்சியினரும் கூட்டணியை நிறைவு செய்வதிலும் தொகுதி பங்கீடு பணிகளை முடிப்பதிலும் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வரிசையில், மக்களின் அதீத எதிர்பார்ப்பை தன் மீது கொண்டுள்ள தமிழக வெற்றிக்கழகம் கூட்டணிக்கு யாரும் வராததையடுத்து தனித்து களம் காண தயாராகி வருகிறது. தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, இன்று வேட்பாளர் தேர்வை தொடங்கியுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய். முன்னதாக கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரிய சிபிஐ-யின் அழைப்பை ஒத்திப்போட வைத்துவிட்டு முதற்கட்ட வேட்பாளர் தேர்வில் ஈடுபடுகிறார் விஜய்.

இன்றைய நிலையை பொறுத்தவரை, விருப்ப மனு அளித்தவர்களில் தேர்வானவர்களில் சுமார் 50க்கும் மேற்பட்டோரை நேர்காணல் செய்யும் விஜய், அதில் என்.ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளையும் நேர்காணல் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் வேட்பாளர் தேர்வில் விஜய் சில விஷயங்களில் முக்கிய கவனம் செலுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரசிகர் மன்றம் தொடங்கியதிலிருந்து பயணிப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேட்பாளர் தேர்வில் நேர்காணல் செய்கிறார் விஜய் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதுபோக, இன்று சேலம், சென்னை புறநகர், தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்ட செயலாளர்களும் நேர்காணலில் பங்கேற்கிறார்களாம். முக்கியமானவர்களே இன்றைய நேர்காணலில் பங்கேற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் வேட்பாளர்களாக தேர்வாக வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ‘தவெகவில் அதிக பணம் கொடுப்பவர்களுக்கே சீட்’ என கிசுகிசுக்கப்பட்டது வந்த நிலையில், மேற்கூறிய தகவல் முக்கிய கவனம் பெறுகிறது.

இந்த தகவல் ஒருபுறம் இன்று பேசுபொருளாக இருக்க, மறுபுறம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையில் செந்தில்பாலாஜி ஆஜராகவுள்ள தகவலும் பேசுபொருளாகியுள்ளது. ‘விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியும் அதற்கு பதில் இல்லாததையடுத்து இ-மெயில் அனுப்பியும் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை’ என சில ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ள செந்தில்பாலாஜி, “மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு CBI அனுப்பிய சம்மனின் அடிப்படையில், கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என கூறியுள்ளார். அவ்விசாரணைக்கு பின்பாகவும், விஜய்யின் சிபிஐ விசாரணைக்கு பின்பாகவும் சில முக்கிய நகர்வுகள் தமிழக அரசியலில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக என்.டி.ஏவில் விஜய் இடம்பெறுவாரா? அல்லது தற்போதைய முடிவின்படியே தனித்து போட்டியிடுவாரா? எனும் கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version