நாகை மாவட்டம் கீழப்பிடாகை பகுதியில், அதிகாரப்பூர்வமாகப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தும் கூட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கு நின்று செல்வதில்லை என அப்பகுதி மக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழப்பிடாகை கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அன்றாட வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் விவசாயிகள் எனப் பெரும்பாலானோர் தங்களின் வெளிவட்டாரப் பயணங்களுக்குப் பேருந்து சேவையையே முழுமையாக நம்பியுள்ளனர்.
மேலப்பிடாகை வரை நடக்கும் அவலம்: அரசு சார்பில் கீழப்பிடாகை பகுதியில் பயணியர் நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதியைக் கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இங்கு நிற்பதே இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி மக்கள், முதியவர்கள் மற்றும் பள்ளிச் சிறுவர்கள் வேறு வழியின்றி நீண்ட தூரத்திலுள்ள மேலப்பிடாகை பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே சென்று பேருந்து ஏற வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. இதனால் அவர்கள் தினசரி கடும் மன உளைச்சலுக்கும், கால விரயத்திற்கும் ஆளாகி வருகின்றனர்.
நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை: இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான தீர்வும் எட்டப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நாகை மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, கீழப்பிடாகை பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் கட்டாயம் நின்று செல்ல உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
