போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மீதும் அதிமுகவின் தற்போதைய தலைமை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற விதம் சட்டப்படி தவறானது என்றும், அவர் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் கிடையாது என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார். இது தொடர்பான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சசிகலாவால் முதலமைச்சர் பதவியைப் பெற்றுவிட்டு, தற்போது அவருக்கே துரோகம் செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி நன்றி உணர்வின்றிச் செயல்படுவதாகச் சாடினார். அதிமுகவில் இருந்து தான் தானாக வெளியேறவில்லை என்றும், பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசித் தன்னை அவமானப்படுத்தித் துரத்தியடித்தது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், தன் மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லை என உறுதிபடக் கூறினார். கடந்த காலங்களில் தான் அளித்த வாக்குறுதிகளில் 99.9 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முறை முதலமைச்சர் ஸ்டாலினின் வெற்றி வேட்பாளராகப் போடியில் களம் காண்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருவதால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தெரிவித்தார்.
