அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1972-ஆம் ஆண்டு திமுகவிற்கு எதிராக ‘பொன்மனச்செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் மக்களின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் உருவாக்கிய இந்த இயக்கத்தை இரும்புக்கோட்டையாக மாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா. எம்.ஜி.ஆர், அம்மா மற்றும் அவர்கள் காட்டிய வழியிலான ஆட்சி என மொத்தம் 31 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து, ஏழைகளைக் காத்து, வறுமையை ஒழித்த பெருமை இந்த இயக்கத்திற்கு உண்டு. கல்வி, சுகாதாரம், விவசாயம், தொழில்துறை என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிய பெருமை கழக அரசைச் சேரும்.

“காய்த்த மரம்தான் கல்லடி படும்” என்பார்கள். அதுபோல, எதிரிகளின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கம்பீரமான ஆலமரத்தின் நுனிக் கிளையில் சிலர் அமர்ந்துகொண்டு, அடி மரத்தையே வெட்டிச் சாய்க்கப் பார்க்கிறார்கள். அவர்கள்தான் கீழே விழுந்து உருக்குலைந்து போவார்களே தவிர, ஆலமரத்திற்கு எந்தத் தீங்கும் வராது. தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித் தலைவி அம்மாவும் இதுபோன்ற தேர்தல் பின்னடைவுகளைச் சந்தித்து, மீண்டும் வென்று வந்தவர்கள்தான்.

அதிகாரம் இருந்தால் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் என்ற நிலையில் நமது இயக்கத்தின் கோடான கோடி தொண்டர்கள் ஒருபோதும் இருந்ததில்லை. புரட்சித் தலைவர் மற்றும் அம்மாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கத்தை அழிக்க எதிரிகள் எத்தனையோ வழிகளில் முயற்சி செய்தார்கள். அனைத்து சூழ்ச்சிகளையும் தொண்டர்களின் உறுதுணையோடு முறியடித்து, அம்மா வழியில் பொற்கால ஆட்சி நடத்தினோம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், இன்று தொண்டர்களாலும், நிர்வாகிகளாலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறேன். நாளை, எனக்குப் பின் தகுதியுள்ள வேறு ஒருவர் இந்த இயக்கத்தை வழிநடத்துவார். இதுதான் நமது கட்சிக்கு மட்டுமே இருக்கும் தனிப்பெரும் பெருமை.

2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான் என்றாலும், நாம் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழந்துவிடவில்லை. நாம் தனித்து 21.21 சதவீத வாக்குகள், அதாவது 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 வாக்குகளையும், கூட்டணியோடு சேர்ந்து சுமார் 1 கோடியே 34 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பித்தான் மக்கள் 47 சட்டமன்றத் தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகள் 6 தொகுதிகளிலும் என, மொத்தம் 53 தொகுதிகளில் நம்மை வெற்றி பெறச் செய்துள்ளனர். மக்களின் விருப்பத்தையும், நமது பின்னடைவையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். அதேநேரம், இந்தத் தோல்வியைக் கண்டு நாம் கொஞ்சமும் துவளவில்லை. ஏனென்றால், இது நிரந்தரமல்ல. பதவி இல்லாமலும், மக்களுக்காகப் போராடும் இயக்கம் இது. தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும் இயக்கம்; தோல்விகளை வெற்றியாக்கி, ஆட்சியைக் பிடிக்கும் இயக்கம் இதுவாகும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் மக்கள் முழு ஆதரவையும், பெரும்பான்மையையும் கொடுக்கவில்லை. எனவே, தூய சக்தி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னைக்காப்பாற்றிக் கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், அந்தத் தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தியுள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து விதவிதமாகக் கற்பனைச் செய்திகள் உலா வரும். அப்படித்தான், திமுகவிற்கு எதிராகத் தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கத் திட்டமிட்டதாகப் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நமது கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.

ஆனால், தமிழக வெற்றிக் கழகம் நமது கட்சிக்குள்ளே குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு ஒரு பொய்க்கால் குதிரை ஆட்சியை அமைத்துவிட்டது. வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால், நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. இப்போதும் நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அரசியலில் அவ்வப்போது சில புயல்கள் வந்துபோகும். அந்தப் புயல்களையெல்லாம் தாங்கியும், தாண்டியும் நிற்கும் ஆயிரம் காலத்துப் பயிர் ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா காலம் முதல் இன்றுவரை இயக்கத்திற்குத் துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், அவர்கள் திருந்தினால் தாயுள்ளத்துடன் மீண்டும் ஏற்றுக் கொள்வதும் இந்த இயக்கத்தின் வழக்கம். அவர்களின் வழிகாட்டுதல்படியே இன்றும் நாம் செயலாற்றி வருகிறோம். நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சினைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சினை இருப்பின் அதை நாமே பேசித் தீர்த்துக் கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான எம்.ஜி.ஆர், அம்மா ஆகிய நமது இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும். ஒளிமயமான எதிர்காலம் நமக்குக் காத்திருக்கிறது. விட்டில்பூச்சியாக வீழ்ந்து விடாதீர்கள். அனைவரும் ஒன்று கூடுவோம். மக்கள் எதிர்பார்க்கும் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ ஆட்சியை அமைப்போம். நாளை நமதே! இந்த நாடும் நமதே! என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version