பாஜக – அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படி பேசுபவர் கிடையாது. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என்றார். திமுக ஐம்பதாயிரம் ரூபாய் அறிவித்தாலும் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்து விடும். விவசாயிகள் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எல்லோரும் போராடி கொண்டிருக்கிறார்கள். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. தமிழ்நாட்டில் கூலிப்படைகள் உருவாகிற அளவிற்கு போதைப்பொருள்கள் பள்ளிக்கூடங்களின் அருகிலேயே கிடைக்கிறது.
தேசிய ஜனநாய கூட்டணிக்கு வருவது குறித்து ஓபிஎஸ்-தான் முடிவெடுக்க வேண்டும். அம்மாவின் ஆட்சி அமைக்க வேண்டும் எனச் சொன்னவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்கள், அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். அது யாராக இருந்தாலும் சரி. கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் யாரெல்லாம் அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்களோ அவர்கள் தங்களுக்கு என்ன பலன் என பார்க்காமல் கட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பிரிந்து சென்ற அம்மாவின் தொண்டர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம். இன்னும் ஒரு சிலர் வெளியில் இருக்கிறார்கள். அவர்களும் வர வேண்டும்” என்றார்.
