திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் குறித்த விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இரண்டாவது நாளாக இன்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்தது. இன்றைய விசாரணையில் கோயில் நிர்வாகம், சிக்கந்தர் தர்கா மற்றும் அறநிலையத்துறை சார்பில் முன்வைக்கப்பட்ட பரபரப்பு வாதங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோவில் நிர்வாக தரப்பு வாதம்:-
கோவில் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர், “திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் கோவில் நிர்வாகத்திற்கே முழு அதிகாரமும் உரிமையும் இருக்கிறது; ஆகம விதிகள் மற்றும் அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டே கோவில் நிர்வாகம் செயல்பட வேண்டியுள்ளது” என தெரிவித்தார். மேலும், “தீபம் ஏற்றுவது தனிநபர் உரிமை அல்ல. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றத்தில் ஆகம விதிகளின்படி தீபம் ஏற்றும் நடைமுறையே தொடர்ந்து வருகிறது. அத்தகைய கோவில் மரபு, வழிபாட்டு முறைகள் மற்றும் பழக்கவழக்கங்களை மாற்ற வேண்டுமென தனிநபர் கோர முடியாது. மலைமேல் தீபம் ஏற்றுவது கோவில் சார்ந்த ஆகம நடைமுறை. அதனை வீட்டில் தீபம் ஏற்றுவது போல கருத முடியாது” எனத் தெரிவித்தார். “ஆகம விதிகளை மீறி செயல்பட கோவிலை கட்டாயப்படுத்த முடியாது” என்பதை குறிப்பிட்ட அவர், “இவ்விவகாரத்தில் உயர்நீதிமன்றங்கள் நேரடியாக தலையிட முடியாது” என 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பை மேற்கோள்காட்டினார்.
அதுமட்டுமின்றி, “இவ்வழக்கில் தனிநீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பில் கோவில் தரப்பு, அரசுத்தரப்பு மற்றும் அறநிலையத்துறை முன்வைத்த வாதங்களை ஏற்காமல், தனிப்பட்ட கருத்துகள் இடம்பெறும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக” குற்றம் சாட்டினார். தொடர்ந்து, மலையடிவாரத்திலிருந்து பாதி வழியில் காணப்படும் நாயக்கர் கால தீபத்தூண் தான் உண்மையான தீபத்தூண்; மற்றவைகளை தீபத்தூணாக கருத முடியாது என குறிப்பிட்டு, தொல்லியல்துறை நூல்களில் இடம்பெற்ற தகவல்கள் மற்றும் புகைப்பட ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அறநிலையத்துறை தரப்பு வாதம்:-
கோவில் நிர்வாகத்தை தொடர்ந்து இந்து அறநிலையத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜோதி, “திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரே தீபத்தூண் நாயக்கர் கால தீபத்தூண்; மற்றவை தீபத்தூண் அல்ல. அவ்வாறு வழக்கமாக தீபம் ஏற்றப்படும் தூண்களில் நாயக்கர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், மலை உச்சியில் உள்ள தூணில் எதுவும் இல்லை. பாரம்பரியமாக நாயக்கர் காலத்தில் இருந்தே வழக்கமான இடத்தில் தீபமேற்றப்படுகிறது” எனக்கூறி தொல்லியல்துறை ஆய்வுகளை மேற்கோள்கட்டியதோடு, தனி நீதிபதி பொது இடத்தில் தீபம் ஏற்றுங்கள் என்றால் எவ்வாறு ஏற்றுவது? தற்போது தீபம் ஏற்றப்படும் தூணிற்கு இவ்வளவு ஆதாரங்கள் உள்ளது. இதுபோல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? அப்படி இருப்பின் அதனை மனுதாரர் சமர்பிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வாதாடிய அவர், “தற்போது சரியாக சன்னதிக்கு மேலே உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றும் தூண் தான் உண்மையான தீபத்தூண். அங்கு தீபம் ஏற்றும் நடைமுறை பாரம்பரியமாக கோவில் ஆகமவிதிப்படி நடக்கிறது. இதில் குறுக்கிட்டு குழப்பத்தை விளைவிக்கும் வகையில் மனுதாரர் செயல்பட்டுள்ளார். அதில் உத்தரவும் மனுதாரருக்கு சாதகமாக வழங்கப்பட்டுள்ளது. 1991ஆம் ஆண்டு வழிபாட்டு தலங்களுக்கான சிறப்புச் சட்டப்படி, 1947ஆம் ஆண்டில் ஒரு வழிபாட்டு தலம் எத்தகைய நிலையில் இருந்ததோ அத்தகைய நிலையிலேயே தொடரப்பட வேண்டும். அதில் எவ்விதமான மாற்றங்களையும் செய்ய இயலாது” என தெரிவித்தார்.
தர்கா தரப்பு வாதம்:-
தர்கா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் மோகன், “கோவில் சொத்துக்களை தர்கா தரப்பு அபகரிப்பது போன்ற கருத்துகளை தனி நீதிபதி பதிவு செய்திருப்பது என்பது முற்றிலும் ஏற்கத்தக்கதன்று. தனி நீதிபதியின் தீர்ப்பில் மத நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு, சமூக அமைதி போன்றவை கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், மதுரையில் இன்று வரை மதரீதியான பிரச்சனைகள் ஏதும் இல்லாத நிலையில் இந்த திடீர் உத்தரவில் பொது அமைதியை பாதிக்கும் அபாயம் உள்ளது” என அழுத்தமாக குற்றஞ்சாட்டினார்.
அதுமட்டுன்றி, “கார்த்திகேயன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு, “திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும்” என தாக்கல் செய்த மனுவையே தற்போது மனுதாரர் ராம ரவிக்குமார் மீண்டும் தாக்கல் செய்துள்ளார்” என குற்றம் சாட்டிய வழக்கறிஞர் மோகன், “மலையில் ஏற்கனவே 4 இடங்களுக்கு மேல் தூண்கள் உள்ளதால், மனுதாரரின் இந்த கோரிக்கை மேலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. கடந்த 1920-ம் ஆண்டு தீர்ப்பின் படி, சிக்கந்தர் தர்கா இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானது. ஆனால் அங்கு கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாது என தெரிவிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியதோடு, இதுதொடர்பான உரிமையியல் வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தீபம் ஏற்றுவது குறித்த மனுவில் மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பது முரண்பாடானது என்றும் வாதிட்டார்.
தொடர்ந்து வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் மோகன், “தனி நீதிபதியினுடைய உத்தரவின் ஒவ்வொரு பத்தியிலும் எங்களுக்கு கருத்து முரண்பாடு உள்ளது. இயற்கைக்கு அப்பாற்பட்டு நீதி வழங்கியுள்ள தனி நீதிபதியின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. குறைந்தது 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கும் நிலை இருந்தும் தனி நீதிபதி கால அவகாசம் கொடுக்காமல் வழக்கை நடத்தினார். தனிநீதிபதி வெறும் தர்காவை மட்டும் கருத்தில் கொண்டார். தொழுகை நடக்கும் இடம், நெல்லித்தோப்பு பகுதிகளை கணக்கில் கொள்ளவில்லை. தூணுக்கு உரிமை கொண்டாட சிவில் நீதிமன்றத்தையே நாட வேண்டும். ‘கடந்த 2005-ல் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தர்கா அருகேயுள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் தர்கா அருகில் 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம் என ஒப்புதல் வழங்கியதாக’ தனி நீதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் தர்காவின் எல்லை இதுவரை வரையறுக்கப்படவில்லை என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “தீபத்தூணில் தீபமேற்றுவதில் தர்கா தரப்பின் நிலைப்பாடு என்ன? தர்காவிற்கு அப்பால் 15 மீட்டர் தொலைவில் தீபம் ஏற்றலாமா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த வழக்கறிஞர், “இதுவரை முறையாக எல்லைகள் வரையறுக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் அளவீடு செய்தால் தான் தனிநீதிபதி உத்தரவை அமல்படுத்த இயலும். மலை உச்சியில் உள்ள தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் தூண் இருக்கும் நிலையில், தனி நீதிபதியோ அந்த தூண் 50 மீட்டர் தொலைவில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்” என்பதை மேற்கோள்காட்டினார். இதனை தொடர்ந்து, தர்கா தரப்பிற்கு ஆதரவான மனுதாரர் முன்வைத்த வாதத்தில், ”அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு பிரச்சனையால் மத ரீதியிலான ஏராளமான கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. அத்தகைய சூழலை கருத்தில் கொண்டு பார்க்கும்போது தனி நீதிபதியின் உத்தரவுகள் ஏற்புடைதல்ல. உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை (டிச.16) வஃப் போர்டு மற்றும் காவல்துறை ஆணையர் தரப்பு வாங்களை முன்வைக்கலாம்; இனி எந்தவொரு இடையீட்டு மனுவும் ஏற்கப்படாது எனக்கூறி வழக்கை செவ்வாய்க்கிழமையான நாளைக்கு ஒத்தி வைத்தனர். நாளைய வாத விசாரணைகளுக்கு பின் திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் நீதிபதிகள் ஒரு முடிவுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
