திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவிடம் பேசிவரும் மக்கள் நீதி மய்யம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதா? அல்லது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதா? என குழம்பிப்போய் உள்ளதாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினருடன், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, பொதுசெயலர் அருணாசலம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சந்திப்பின் போது, 12 தொகுதிகளின் பெயர் கொண்ட விருப்ப பட்டியலை வழங்கியுள்ளனர்.
மநீம கட்சி கடந்த 2024 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது. அதற்கு கைமாறாகவே கமலுக்கு ராஜ்யசபா ‘சீட்’ வழங்கப்பட்டது. சட்டசபை தேர்தலை பொறுத்தவரை வரும் 2026 சட்டசபை தேர்தலில் தான் முதல் முறையாக திமுக கூட்டணியில் மநீம போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு வேளச்சேரி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘டார்ச் லைட்’ சின்னத்தை ம.நீ.ம., கட்சிக்கு தேர்தல் கமிசன் ஒதுக்கியுள்ளதால் அந்த சின்னத்தில் போட்டியிடும் என்ற கருத்து ஒருபுறம் இருந்தாலும் , உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு திமுக வலியுறுத்தும் சூழலும் இங்குள்ளது. ஆகவே, தற்போது ‘எந்த சின்னத்தில் கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுசெயலர் அருணாசலம் கூறும்போது, “சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மநீம எவ்வாறு பலம் சேர்க்கும் என்ற தரவுகளை கொடுத்தோம். அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச்செல்வதாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் தெரிவித்தனர். போட்டியிடும் சின்னம் டார்ச் லைட்டா? உதயசூரியனா? என்பது குறித்து கட்சித் தலைவர் கமல் ஆலோசனையின் படி முடிவெடுக்கப்படும்” என கூறினார்.
நமது சின்னம் முக்கியமா? அல்லது திமுகவின் பிணக்கற்ற தோழமை முக்கியமா? என்ற கேள்வியில் எதற்கு கமல் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறார் என்பதன் பின்னணியிலேயே மக்கள் நீதி மையத்தின் சின்னம் வாக்கு இயந்திரத்தை இடம்பெறும். அதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
