திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் அமைச்சர் ஐ பெரியசாமி மேடையில் பேசும்போது, ஆத்தூரில் சேர்மனாக இருந்த மேரியின் பதவிக்காலம் முடிந்து விட்டது.
மேரியின் பதவி காலமே முடிந்து விட்டது அவர் Retired ஆகவில்லை. அரசியலில் No Retirement – ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் Retirement ஆகுவோம் என்று கனவு காணாதீர்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 96 வயது வரை அரசியலில் இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதேபோல் முதலமைச்சரும் 100 வயது வரை தமிழ்நாட்டை ஆளப் போகிறார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை என்று நினைத்து விடாதீர்கள். குறைகள் இல்லாமல் யாரும் இல்லை. அனைவருக்கும் கனவு இருக்கும். எதையும் வெளிப்படையாக கூற முடியாது. மாமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் மேயராக இருந்தாலும் உங்களது கனவு வீண் போகாது நான் இருக்கும் வரை. திண்டுக்கல்லில் திமுக உறுப்பினர்களின் உழைப்பு வீண் போகாது. நம்மிடத்தில் சாதி பாகுபாடு என்பது இருக்கக் கூடாது. நாம் அனைவரும் ஒரே குடும்பம்.
திமுக என்பது ஒரே குடும்பம் தான். யார் இல்லை என்று கூறினார்? எங்கள் குடும்பத் தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து உதயநிதி ஸ்டாலினும் வருவார். உதயநிதி வரக்கூடாது என என்ன இருக்கிறது. மற்றவர்கள் வரவில்லையா? ஏதோ காரணத்திற்காக பேச வேண்டும் என நினைக்கின்றனர். அவர் உழைக்கிறார் வருவார். அந்த குடும்பத்தில் உழைப்பு இருக்கிறது, தியாகம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்காக பல நன்மைகளை செய்துள்ளனர்.
ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். யார் எது வேண்டுமானாலும் கேட்கலாம். முடிவு முதலமைச்சர் கையில் உள்ளது என்றார்.
